

எக்காலத்திலும் அழியாத கல்விச் செல்வத்தை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் ஊதியம் வழங்குவதற்கு கூட நிதியில்லாமல் தடுமாறிக்கொண்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. நிதி குறித்த கவலையின்றி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள், அடுத்த மாத ஊதியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்க வேண்டிய மானியத்தின் அளவு குறைந்து கொண்டே வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் செலவுகள் அதிகரித்து விட்டதுதான் இதற்கு காரணமாகும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களிலும் கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது. பல்கலைக்கழகங்கள் சிறந்த ஆராய்ச்சி மையங்களாக திகழ வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும். அதன் மூலம் வருவாய் ஈட்டி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் அந்த அளவுக்கு மேம்படவில்லை.
எனவே, இடைக்கால ஏற்பாடாக பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கவும், நீண்ட கால ஏற்பாடாக பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சியில் சிறந்தவையாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவையாகவும் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.