

சென்னை,
அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நான்காவது முக்கிய கட்சியான தமாகாவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தமாகா தரப்பில் நிர்வாகிகள் கோவைத்தங்கம், வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுடைய வெற்றிக்காக தமாகா இளைஞரணியினர் களப்பணி ஆற்றுவர். எதிர்க் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளுக்கு முன், அதிமுகவின் நிஜ வாக்குறுதிகள் நிச்சயம் வெல்லும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு அறிவித்துள்ள அறிவிப்புகளும் தேர்தலில் எதிரொலிக்கும்.
தொகுதிப் பங்கீடு குறித்த தமாகாவின் எண்ணத்தை அதிமுகவிடம் நிச்சயம் பிரதிபலிப்போம். அதற்கேற்றவாறு இலக்கை நிர்ணயிப்போம். கூட்டணிப் பேச்சுவார்த்தை, சுமுகமான முறையில் நடைபெற்று அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்க, நெருங்க எத்தனை புதிய அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் முதல் அணியாக, வெற்றி அணியாக அதிமுகவே செயல்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் எங்கள் செயல்பாடு தொடர்ந்து இருக்கும். தேர்தல் ஆணையத்தின் கடைசி நாள் வரை முயற்சியை மேற்கொள்வோம்''.
இவ்வாறு அவர் கூறினார்.