

சென்னை,
மகாவீர் ஜெயந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக மக்களுக்கும், குறிப்பாக சமண சமயத்தை சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மகாவீரின் உன்னத போதனைகளான அகிம்சை, சத்தியம் மற்றும் உலகளாவிய இரக்கம் ஆகியவை நீதி மற்றும் நேர்மையின் பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆன்மாவின் குரலை மதிக்க கற்றுக்கொடுத்தவர் மகாவீர். கொரோனா தொடர்பான அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி விழாவினை கொண்டாடுமாறு தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் தங்கி, பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான பகவான் மகாவீரின் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மகாவீர் ஜெயந்தி' நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அறத்தையும், அகிம்சையையும் இரு கண்களாக போற்றிய பகவான் மகாவீரின் பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, காமராஜர் தேசிய காங்கிரஸ் நிறுவன தலைவர் எம்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.