தக்காளி விலை கடும் வீழ்ச்சி

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தக்காளி விலை கடும் வீழ்ச்சி
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தக்காளி சாகுபடி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்த மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 300 டன் முதல் 500 டன் வரை தக்காளிகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்த தக்காளிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரகத்திற்கு ஏற்ப ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை மற்றும் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே நேற்று காலை பாலக்கோடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கு விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரகத்திற்கு ஏற்ப ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. விலை வீழ்ச்சியால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

விளைச்சல் அதிகரிப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் இந்தாண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. போதிய விலை கிடைக்காததால் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கின்றனர். மேலும் பலர் தோட்டங்களில் பறிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com