கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் 9 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தேனி,

பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மலை முகடுகளுக்கு இடையே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், கும்பக்கரை அருவியில் நீராடி செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் கடந்த 9 நாட்களாக அருவியில் குளிக்க தடை நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இந்த நிலையில் கும்பக்கரை அருவியில் 9 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நீர்வரத்து சீராகியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com