

தென்காசி,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியூர்களில் இருந்து கார், வேன், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக வருகை புரிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவிட்டு குற்றாலத்தில் உள்ள பூங்கா பகுதி மற்றும் அருவி கரைகளுக்கு செல்லும் சாலை ஓரப் பகுதிகளில் உள்ள மர நிழல்களில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்டு மகிழ்ந்து நேரத்தை செலவிட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. இதனால் அருவிகளுக்கு வரும் நீரின் அளவும் கனிசமாக குறைந்துள்ளது. எனினும், சுற்றுலா பயணிகள் குறைவாக வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.