தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சாலையை மூடிய மணலால் சுற்றுலா பயணிகள் அவதி

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் சாலையை மணல் மூடியது.
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சாலையை மூடிய மணலால் சுற்றுலா பயணிகள் அவதி
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே தடுப்புச்சுவர் மீது கடல் அலை மோதி சாலை வரை தண்ணீர் சீறிப்பாய்கின்றன. ஆக்ரோஷமாக சீறிஎழும் கடல் அலைகளை தடுப்புச்சுவர் கற்கள் மீது ஏறி நின்று, சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

அதேபோல பலத்த சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடி அரிச்சல் முனை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் நேற்று கடற்கரை மணல் மூடியுள்ளது. மேலும் தனுஷ்கோடி பகுதியில் புழுதி காற்றும் வீசி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் சாலையை மணல் மூடியது குறிப்பிடத்தக்கது.

அரிச்சல்முனை சாலைகளில் மூடப்பட்ட மணலை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடந்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து காற்று வீசி வருவதால் மணல் மீண்டும் சாலைகளை மூடிவருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com