வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கலில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

தர்மபுரி,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் பயணம் செய்தும் மகிழ்கின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கலில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வார விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் அவர்கள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் ஒகேனக்கலில் உள்ள பரிசல் ஓட்டிகள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com