ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ்சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி, படகு இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டியதால் படகு குழாமில் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனத்தில் ஏற்காட்டுக்கு வந்திருந்ததால் முக்கிய சாலைகளான படகு இல்லம் சாலை மற்றும் ரவுண்டானா பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.