

சென்னை,
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரியும் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று விடுப்பு எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்துக் கழக ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை மீறும் பட்சத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் போக்குவரத்து துறை தரப்பில் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
எனவே, தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அதே போல் ஆட்டோ, கால் டாக்சி சேவைகளிலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.