

சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் 3 பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் கந்தவேல் ஆகியோர் கூறியதாவது:-
டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மதுபாட்டில்களை வாங்கி, சுத்தம் செய்து மது ஆலைகளுக்கு அனுப்பும் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன. வண்டி, குடோன் வாடகை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி குளறுபடிகளால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஜி.எஸ்.டி. வரியை மது ஆலை உரிமையாளர்களே ஏற்க வேண்டும்.
அபராத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதுகுறித்து அமைச்சர்கள், மதுஆலை உரிமையாளர்கள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலி பாட்டில்களை வாங்கி சுத்தம் செய்து அனுப்பும் பணியை நிறுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.