

மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நமது பாரம்பரிய நெல் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை வட்டாரங்களில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெல் ஜெயராமன் மரபு சார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மயிலாடுதுறை, காளி, மணல்மேடு, வில்லியநல்லூர் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய விதைநெல் 50 சதவீத மானிய விலையில் கிடைக்கும். ஒரு விவசாயி அதிகபட்சமாக 20 கிலோ வரை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.