

சர்க்கரை ஆலை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நெல்வாய் என்ற இடத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இதனால் பள்ளிப்பட்டு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கரும்புகளை வெட்டி டிராக்டர், லாரிகளில் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனர்.
இவ்வாறு ஏற்றப்படும் கரும்பு கட்டுகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் சாலையை அடைத்தபடி செல்கிறது.
போக்குவரத்து நெரிசல்
இந்த வாகனங்கள் பள்ளிப்பட்டு நகருக்குள் நுழையும்போது மற்ற வாகனங்கள் அதை கடந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவசர சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே பகல் நேரத்தில் அதிக பாரத்தை ஏற்றி வரும் வாகனங்களை இரவு 8 மணிக்கு மேல் பள்ளிப்பட்டு நகருக்குள் நுழைய அனுமதிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆவன செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.