

விருதுநகர்,
வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரச்சாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவரது மகன் ஜெகன் (வயது 5). சிறுவன் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சிறுவன் மிதித்ததாக தெரிகிறது.
இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.