

கரூர்,
மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர்-மாணவி பலியாகினர். மேலும் 3 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 21). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கவுதம் தனது கல்லூரியில் படித்து வரும் கரூர் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த மதுப்பிரியா, காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். காரை கவுதம் ஓட்டினார்.
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே கார் வந்த போது, திடீரென கவுதமின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த கவுதம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த மாணவிகளும் படுகாயமடைந்தனர்.
விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அங்கு சென்று, காயமடைந்த மாணவிகளை மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மதுப்பிரியா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகிய 3 மாணவிகளும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தில் கார் மோதியதில் மாணவர்-மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.