கோவையில் சோகம்: நீட் மறுதேர்வு பயத்தில் மாணவி தற்கொலை

கோவையில் நீட் மறுதேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் சோகம்: நீட் மறுதேர்வு பயத்தில் மாணவி தற்கொலை
Published on

கோவை,

கோவையை அடுத்த கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதுடன், கோவை மாவட்ட சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் தொழிற்சங்க பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவரது மகள் அனுகீர்த்தனா (19 வயது).

கடந்த 2024-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடித்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து கடந்த மே மாதம் 3-ந்தேதி நடந்த நீட் தேர்வையும் அனு கீர்த்தனா எழுதி இருந்தார்.

இந்த நிலையில் வடமாநிலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த மாதம் 3-ம்தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக வருகிற 21-ந்தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அனு கீர்த்தனா, மீண்டும் நீட் தேர்வு எழுத பயமாக இருப்பதாக உறவினர்கள், நண்பர்களிடம் கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்கு அனு கீர்த்தனா சென்றார். பின்னர் அவர் தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு 'நான் வாழ விரும்பவில்லை' என்று வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினார்.

இதையடுத்து பூட்டப்பட்ட அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி அனு கீர்த்தனா உயிரிழந்து கிடந்தார். அருகில் தலைவலி தைலம் இருந்த பாட்டில் காலியாக இருந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com