

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா பகுதியில் விஷ ஊசி செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் அருகே உள்ள கணபதிபட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையா, விவசாயி. இவருடைய மகள் சின்னநம்பி (வயது 25). இவர் 2020-ம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். கடந்த மாதம் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.
படித்து கொண்டு இருந்தபோது இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த தாய்மாமன் மகனான இளையராஜாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இளையராஜாவும் சென்னையில் வேலைபார்த்து வந்தார். சென்னையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெண் டாக்டர் சின்னநம்பி, கணபதிபட்டியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். நேற்று மதியம் ஒரு அறையில் தூங்குவதாக கூறி சென்றுள்ளார். மாலை வரை அவர் எழுந்து வராததால் சின்னையா அவரை எழுப்பி உள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. மேலும் அவரது அருகில் ஊசி மற்றும் சில மாத்திரைகள் கிடந்தன. இதையடுத்து சின்னையா தனது மகளை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்ததில் சின்னநம்பி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த புழுதிபட்டி போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், குடும்ப பிரச்சினை காரணமாக விஷ ஊசி செலுத்தியும், மாத்திரைகளை தின்றும் சின்னநம்பி தற்கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். முழுமையான விசாரணைக்கு பின்னரே அதுபற்றி விரிவாக கூற முடியும்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.