

தென்காசி,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூரைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் (70). இவர் நெல்லைக்கு செல்ல அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்தார். பின்னர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏற முயன்றார். வயது மூப்பு காரணமாக படிக்கட்டில் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் முழுமையாக ஏறுவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய சுப்பம்மாள் கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.