

வேலூர்,
வேலூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கவசம்பட்டு கிராமம் யாதவர் வீதியைச் சேர்ந்த தம்பதி பூபாலன் - கலா. இவர்களின் மகன் சரத்குமார் (34 வயது). இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மோனிஷா (28 வயது) என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மோனிஷா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே கடந்த 13-ந்தேதி சரத்குமார் திடீரென இறந்து விட்டார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீளமுடியாத மோனிஷா தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.