கணவர் இறந்த 4 நாளில் சோகம்: குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 2 வயது குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் இறந்த 4 நாளில் சோகம்: குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை
Published on

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் ஜெயம்நகர் பகுதியில் மித்தல் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). நில புரோக்கர். இவருடைய மகன் விவேக் (வயது 30). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஷாலினி(25). பி.காம். பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய 2 வயது பெண் குழந்தை விசாகா.

இந்த நிலையில் ஷாலினி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்து 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சில மாதங்களாக விவேக் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மகள் பிறந்தநாளை கொண்டாடினர்

4 நாட்களுக்கு முன்பு குழந்தை விசாகாவின் பிறந்தநாளை உறவினர்களுடன் கொண்டாடினர். அதன்பிறகு விவேக் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மனவருத்தத்துடன் ஷாலினி இருந்தார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இந்தநிலையில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதிக்கு நேற்று காலை ஷாலினி தனது 2 வயது மகள் விசாகாவுடன் சென்றார். பின்னர் அவர் விசாகாவை தனது முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தார். இதில் நீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருநகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஷாலினி உடலை மீட்டனர். குழந்தை விசாகா உடலை நீண்டநேரம் தேடியும் கிடைக்காததால் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி குழந்தையின் உடலை மீட்டனர். தாய், குழந்தையின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறியது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவேக்கிற்கும், ஷாலினிக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் சம்பவம் பற்றி ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாமனாரும் தற்கொலை முயற்சி

இதற்கிடையே ஷாலினியின் மாமனார் ரவிச்சந்திரன் மகன் விவேக் இறந்த துக்கம் தாங்க முடியாமல் சோகத்தில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் மருமகளும், பேரக்குழந்தையும் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டதும், ரவிச்சந்திரன் அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com