

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மதுபோதையில் தாயிடம் தகராறு செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள கன்னிவிளை கிராமத்தைச் சேர்ந்த வீரதுரை மகன் தங்கதுரை (வயது 23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அந்த வாலிபர் தினமும் அவரது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஏற்கனவே 2 முறை தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த அந்த வாலிபர் வழக்கம் போல அவரது அம்மாவிடம் தகராறு செய்து விட்டு, கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது தங்கதுரை அம்மாவின் சேலையை பயன்படுத்தி சீலிங் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.