

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சுஜி தேவராஜ். இவரது மகன் ஞானசேகர் (30 வயது). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் வாடகை வீட்டில் 4-வது மாடியில் தங்கி இருந்த ஞானசேகர் செல்போனில் பேசிக் கொண்டே மாடி ஏறியதாக கூறப்படுகிறது. அப்படி பேசி கொண்டே மொட்டை மாடிக்கு சென்ற ஞானசேகர் கால் தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.