

சின்னசேலம்:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டார வள மையம் சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்விக்கு வழிகாட்டும் கருத்தாளர்களுக்கான பயிற்சி சின்னசேலத்தில் நடந்தது. இதற்கு உதவி திட்ட அலுவலர் பழனியாபிள்ளை தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி, கருத்தாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணியன் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ராஜா, எஸ்.ராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் எந்த படிப்பினை தேர்வு செய்வது பற்றியும், பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை உடனடியாக தேர்வு எழுத வைப்பது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் சின்னசேலம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கருத்தாளர்களும் பயிற்சி அளித்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வரதராஜன், சக்திவேல், ஆனந்தராசு, மாரியப்பன், ரவிக்குமார் மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.