

தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்வதற்கு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை
தமிழக அரசின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன்கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதனை முகாம் அமைத்து பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 500 விண்ணப்பதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பாளராக கிராம நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ஒவ்வொரு ரேஷன்கடைக்கும் அருகில் உள்ள அரசு கட்டிடங்களில் இதற்காக முகாம் அமைத்து தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உள்ளனர். அவ்வாறு பதிவு செய்யும் தன்னார்வலர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 9 தாலுகாக்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை தாலுகாவில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி தஞ்சை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) செந்தில்குமாரி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் முன்னிலையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ரேஷன்கடைகளில் பயனாளர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பங்களை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
தினமும் 200 பேர் பங்கேற்பு
இதற்காக தன்னார்வலர்களுக்கு தனியாக செயலியும் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த பயிற்சி கடந்த 3 நாட்களாக அளிக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலையில் 100 தன்னார்வலர்களுக்கும், மாலையில் 100 தன்னார்வலர்களுக்கும் என 200 பேருக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.வருகிற 24-ந்தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது.