

சென்னை,
வங்கக் கடலில் உருவான, நிவர் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகில் சுமார் 145 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயலின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகளில் நீர் தேங்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில் சேவையும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றும் கனமழை நீடித்து வருவதன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து கோவை, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் 27 விரைவு ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.