

சென்னை,
தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தலைமைச் செயலாளராக இருக்கும் பிரதீப் யாதவ், இடமாற்றம் செய்யப்பட்டு அதுல் ஆனந்திற்கு பதிலாக நுண், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
அதுல் ஆனந்த் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தீரஜ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு, உயர்கல்வித் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரசின் செயலாளராக இருக்கும் காகர்லா உஷா, இடமாற்றம் செய்யப்பட்டு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளராக இருக்கும் சுந்தரவல்லி, இடமாற்றம் செய்யப்பட்டு, காகர்லா உஷாக்குப் பதிலாக, பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராக இருக்கும் நிர்மல் ராஜ், இடமாற்றம் செய்யப்பட்டு, வள்ளாலாருக்குப் பதிலாக, போக்குவரத்துத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஆணையராக சுப்ரியா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவராக ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக அருண் ராய் நியமனம்.
ராதாகிருஷ்ணன் அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறையின் ஆணையராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.