

தூத்துக்குடியில் எட்டையபுரம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்த டிரான்ஸ்பார்மர் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
பாதுகாப்பு கருதி அந்த டிரான்ஸ்பார்மரைச் சுற்றியிருந்த அனைத்துக் கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன. மின்மாற்றிக்கு மிக அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் மீது தீப்பொறிகள் விழுந்ததில், அந்த வாகனம் மளமளவென எரியத் தொடங்கியது. இதில் அந்த வாகனம் முழுவதுமாகத் தீயில் கருகி எலும்புக்கூடாக மாறியது.
தகவலறிந்த தூத்துக்குடி தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையில், மின்வாரிய அலுவலர்கள் அந்தப் பகுதியில் மின்சார இணைப்பைத் துண்டித்து விபத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்தத் தீ விபத்து குறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், "மின்மாற்றியில் அதிக அளவு மின் அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக, உட்புறத்தில் உள்ள மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது" என்றனர். இந்த விபத்தினால் தூத்துக்குடி எட்டையபுரம் சாலை பகுதியில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் நிலவியது.