

மதுரை,
மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், தற்காலிகமாக பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட குறைவாக ஊதியம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நிலுவையில் உள்ள ஊதியத் தொகையையும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்க முடியாது என்று கூறி குறைந்தபட்ச ஊதியம் மற்றும் நிலுவையில் உள்ள ஊதியத்தை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.