

தூத்துக்குடி,
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் தோர்ன் (வயது 47) என்பவர் தூத்துக்குடியில் தங்கி இருந்தார். அவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்வதற்காக, தூத்துக்குடி கடற்கரையில் சுற்றிக்கொண்டு இருந்தபோது கியூபிரிவு போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் இலங்கை பணம் வைத்து இருந்தார். அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ராஜகுமரேசன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜோனதன் தோர்ன் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக போலீசார் ஜோனதன் தோர்னிடம் நடத்திய விசாரணையில், அவர் பிடிபட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே மும்பையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து உள்ளார். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல்காரரான ஜோனதன் தோர்ன் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்று உள்ளார்.
இதற்காக இலங்கையை சேர்ந்த ஒருவரை ஜோனதன் தோர்ன் தொடர்பு கொண்டார். அவர் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதற்கான விலையும் பேசி இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஜோனதன் தோர்ன் தூத்துக்குடியில் வந்து தங்கி உள்ளார். பின்னர் கடற்கரைக்கு சென்று காத்திருந்தபோது போலீசில் சிக்கி உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.
மேலும் கியூ பிரிவு போலீசார், ஜோனதன் தோர்ன் தங்கி இருந்தபோது யாரேனும் அவரை சந்தித்து உள்ளார்களா? என்பதை அறிவதற்காக அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் யாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்? யாருடைய படகு மூலம் இலங்கைக்கு செல்ல முயன்றார்? என்பன உள்ளிட்ட விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அவரது உயர்ரக செல்போனை திறக்க முடியாததால், அதில் உள்ள தகவல்களை பெற முடியவில்லை. அந்த செல்போனை திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.