பஸ்களில் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும்

பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பஸ்களில் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும் போக்குவரத்துகழக அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
பஸ்களில் பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும்
Published on

கண்டாச்சிமங்கலம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி முதல் கொட்டையூர் வரை தடம் எண்-20 என்ற பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் வந்து செல்லும் சில மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறும், பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஏறி பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதாகவும், மேலும் சில மாணவர்கள் பஸ்சுக்குள் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக அலுவலத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிளை மேலாளர் முருகன் நேற்று புக்குளம் பகுதியில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி அதில் வந்த மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கினார். அப்போது மாணவர்கள் பஸ்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். படிக்கும் காலங்களில் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறாக எந்த செயலிலும் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதன் பின்னர் மாணவர்கள் அனைவரும் மீண்டும் பஸ்சில் ஏறி அங்கிருந்து சென்றனர். அப்போது தியாகதுருகம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் ஆறுமுகம், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com