பழங்குடியின மாணவி பாலியல் வழக்கு - முக்கிய நபர் போலீசில் சரண்

பழங்குடியின மாணவி பாலியல் வழக்கு - முக்கிய நபர் போலீசில் சரண்

கூடலூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பைக்காரா அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் வழக்கம்போல் மாணவி பள்ளிக்கூடத்துக்கு சென்றார். ஆனால், மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது அங்கர்கோடு பகுதியில் புதருக்குள் மாணவி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு மாணவி இறந்து கிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மேலும் மாணவியின் உடலில் காயம் இருந்ததையும், அலங்கோலமாக இருப்பதையும் கண்டனர்.

இதுகுறித்து பைக்காரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த மாணவியின் உடல் அருகே கார் ஒன்று நின்றிருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு கும்பல் காரில் மாணவியை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் அந்த கார் கக்கோடி மந்து பகுதியை சேர்ந்த ராஜினேஷ் (வயது 25) என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான அவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் முக்கிய நபர் ராஜினேஷ் குட்டன் கிராம நிர்வாக அலுவலர் பிரியா முன்னிலையில் பைக்காரா காவல்நிலையத்தில் இன்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com