

சென்னை,
தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விடுதலைப் போராட்ட வீரர்!..விவசாயிகளின் தோழர்!..உழைக்கும் மக்களின் உரிமைப் போராளி!
மாபெரும் தலைவர் - தோழர் ஆர்.நல்லகண்ணுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
இந்திய விடுதலைப் போர் வீரராக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாக உருவெடுத்து, பாட்டாளிகளின் தோழராகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் - மாபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு காலமான செய்திகேட்டு, வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு மனவேதனை அடைந்திருக்கிறேன்.
'பொதுவாழ்வில் நேர்மை' என்பதற்கு தோழர் நல்லகண்ணு என்றே தமிழக அரசியல் களத்தில் பொருள்! அந்தளவுக்கு தன்னலமற்ற, போராட்டங்கள் சூழ்ந்த, தியாகங்கள் மிகுந்த பொது வாழ்வை வாழ்ந்துகாட்டியவர் அவர்! கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அவருடைய தியாகப் பெருவாழ்வு, பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்கும் நிகழ்காலப் பாடங்கள்!
தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக அரசியல் களத்திற்கு மட்டுமல்ல, இந்தியப் பொதுவுடமை அரசியல் களத்திற்கும், சமத்துவத்தைக் கனவு காணும் ஒவ்வொரு பட்டாளித் தோழனுக்கும் பேரிழப்பு! அவரை இழந்து வாடும் பொதுவுடமை இயக்கத் தோழர்களுடனும், அவருடைய குடும்பத்தினருடனும் என் ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாழ்வில் எவராலும் அழிக்க முடியாத தியாகத்தின் தடங்களை ஆழமாகப் பதித்துச் சென்றுள்ள பாட்டாளிகளின் தோழர் நல்லகண்ணுக்கு என் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.