

சென்னை
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய நிலையில், அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக விஜய் திருச்சிக்கு செல்வதால் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
வரவேற்பு முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு செல்கிறார்.
செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேச உள்ள இடத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. விஜய் பேச உள்ள இடம் மற்றும் அவர் வருவதற்கான பாதை ஆகிய இடங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
இதற்கிடையே த.வெ.க. தலைமை நிலையம் சார்பில் அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், சிறுவர்-சிறுமிகள், பள்ளி மாணவ-மாணவிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான கியூ.ஆர். குறியீடு அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை.
எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம். அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, கியூ.ஆர். குறியீடு அனுமதிச்சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் பேச தனியாக மேடை அமைக்கப்படவில்லை. வழக்கம்போல விழா அரங்கிற்குள் நிற்கும் தனது பிரசார பஸ்சின் மீது நின்று உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.