

கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை அருகே நேற்று ஒருவர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரகுநாதன் என்பதும், வெல்டிங் பட்டறை தொழிலாளி என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் மூலம் இயங்கும் வெல்டிங் மிஷினை கண்டுபிடித்ததாகவும், இதற்கு இதுவரை தமிழக அரசு அங்கீகாரம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.