காஞ்சீபுரத்தில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தாய், மகள் சாவு

காஞ்சீபுரத்தில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சீபுரத்தில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தாய், மகள் சாவு
Published on

காஞ்சீபுரம் ஓரிக்கை பேராசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 40) தலைமை செயலகத்தில் நிதித்துறையின் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக பழனி தனது மனைவி வித்யா (35) மற்றும் தனது இரட்டை குழந்தைகளான பூர்ணிமா (4), பூர்விகா (4) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

உத்திரமேரூர்- காஞ்சீபுரம் நெடுஞ்சாலை ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கனரக லாரி பழனியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பழனியின் மனைவி வித்யா, மகள் பூர்ணிமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பழனியும் மற்றொரு மகள் பூர்விகாவும் படுகாயத்துடன் போராடினர்.

அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com