

சென்னை,
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ், செயலாளர் சாத்தையா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி கடந்த 11.11.25 அன்று உத்தரவிட்டது. மேலும் 17.12.25 முதல் போக்குவரத்து துறையின் இணை யதளத்தில் வரைவு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிட்டுள்ள கட்டணங்களை வாகனங்களின் பதிவு வருடத்திற்கு ஏற்ப அவசர, அவசரமாக நடைமுறைப்படுத்தியது.
இந்த கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களாகிய எங்களுக்கு பேரிடி யாக அமைந்தது. எனவே கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போக்குவரத்து துறை அமைச்சர், அதிகாரிகள், எம்.பி.க்களை சந்தித்து நேரில் கோரிக்கை வைத்தோம். கட்டண உயர்வு ரத்து சம்பந்தமான உத்தரவு இன்று வரும், நாளை வரும் என 90 நாட்களுக்கு மேல் காத்திருந்தும் பலன்இல்லை. இது சம் பந்தமான எங்களது கோரிக்கை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா? என்பதும் கேள்வி குறியாய் உள்ளது.
இந்த கட்டண உயர்வை ரத்து செய்திட பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டும் பலன் அளிக்காத நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் நாமக்கல்லில் நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் சம்பந்தமான தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.