

சென்னை,
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்ற முந்தைய இடைக்கால தடை உத்தரவும் நீடிக்கும் என்றும் சென்னை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட் உத்தரவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. புதுச்சேரி சபாநாயகர் எடுத்த நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பு, தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பு என எப்படி மாறுபட்டு வரும். வழக்கு தொடர்ந்த 18 பேரும் ஒற்றுமையாக எங்கள் அணியில் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒற்றுமையோடு உள்ளோம், எந்த தீர்ப்பு வந்தாலும் 18 பேரும் என்னுடன் தான் இருப்பார்கள். மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது என்றார்.