

சென்னை
தனிக்கட்சி துவங்க போவதாகவும், அது குறித்த அறிவிப்பை எம்ஜிஆரின் பிறந்த நாளில் வெளியிட உள்ளதாகவும் எம்எல்ஏ தினகரன் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் எம்ஜிஆர் பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், புதிய கட்சி துவங்குவதற்கான சூழல் தற்போது இல்லை என்றார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் நெருங்கிய ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் தனிக்கட்சி துவங்க போவதாக கூறினார். ஆனால் எப்போது துவங்க போகிறார் என தெரியவில்லை. அப்படி அவர் தனிக்கட்சி துவங்கினாலும் நாங்கள் அதில் சேர மாட்டோம். நாங்கள் எப்போதும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் தான். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தான் என்றார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது தினகரன் தனிக்கட்சி துவங்கினால் அவருக்கு தோளோடு தோள் கொடுப்பேன். அவரது தலைமையை ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.
இந்நிலையில் ஜெ., சிகிச்சை வீடியோ வெளியிட்ட வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜராக வந்த வெற்றிவேல், தினகரன் கட்சி தொடங்கினால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்றார்.
அது போல் புதுச்சேரியில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறும் போது டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார் என கூறினார்.
தினகரனின் நெருங்கிய ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளனர்.
#Vetrivel #TTVDinakaran #NewParty