

சென்னை,
தமிழக சட்டசபைக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 233 தொகுதிகளில் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது.
இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், 10 மணி நிலவரப்படி தவெக 103 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தவெக சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே, சில தொகுதிகளில் வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை குதிரை பேரத்தின் அடிப்படையில் இழுக்க திமுக, அதிமுக முயற்சி செய்யலாம் என விஜய்க்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு கட்சியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், ‘வெற்றி பெற்றதும் வேறு எங்கும் செல்லாமல் எந்நேரமாக இருந்தாலும் பனையூருக்கு வந்துவுிட வேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன்’ என அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியை தவெகவினர் தயார் செய்து வைத்துள்ள தகவல் கசிந்துள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர்களை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களை பாதுகாப்பாக வைக்க பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் 100 பேர் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்களை சிதறாமல் அந்த இடத்துக்கு அழைத்து வரும் முக்கிய பொறுப்பை ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.