

நெல்லை,
திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையும் பங்கேற்றார்.
கூட்டத்திற்கு அல்லா பிச்சை தோளில் தவெக துண்டை அணிந்தபடியும், விசில் அடித்தபடியும் வந்தார். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாமன்ற கூட்டத்தை கட்சிக் கூட்டம் போன்று நடத்தக்கூடாது என்றும், மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் திமுக - தவெக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் தவெக. உறுப்பினர் வைத்திருந்த விசிலை திமுக உறுப்பினர்கள் பிடுங்க முயன்றதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீண்டும் மீண்டும் விசில் அடித்ததால் மாமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மாமன்ற கூட்டத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, மாமன்ற கூட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் தெரிவித்தார். அதன்படி, மாமன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சையை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள தடை விதித்து (சஸ்பெண்ட்) மேயர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.