கவர்னருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்... அடுத்த நகர்வு என்ன...? - பரபரக்கும் அரசியல் களம்

த.வெ.க. வேட்பாளர்கள் முன்னிலை என்பது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தது.
கவர்னருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்... அடுத்த நகர்வு என்ன...? - பரபரக்கும் அரசியல் களம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது. இந்த தேர்தலில் விஜய்யின் த.வெ.க. தனித்து களம் கண்டது. தி.மு.க. காங்கிரஸ், தே.மு.தி.க.. கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடனும், அ.தி. மு.க. பா.ஜனதா, பா.ம.க.. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடனும் களம் இறங்கின. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிட்டது.

234 தொகுதிகளில் 4,034 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடியாகும். இதில் 4 கோடியே 87 லட்சத்து 919 பேர் வாக்களித்த னர். இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள் வரத் தொடங்கியதும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.

த.வெ.க. வேட்பாளர்கள் முன்னிலை என்பது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தது. ஆனால் அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன.

இறுதியாக த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 74 இடங்களை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை பெற்றது. இதன் மூலம் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்தது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் ஆட்சியை அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது. கவர்னரும் அதற்கு அனுமதி அளிப்பார். அதனால் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபின்பு சட்டசபையை குறிப்பிட்ட தினங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக தலைவர் விஜய் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கடிதத்தில் தவெக கூறியுள்ளது. இந்த கடிதத்திற்கு கவர்னர் விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது த.வெ.க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகியோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அப்படி ஒரு ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் முதல்முறையாக மலரும் கூட்டணி ஆட்சி இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com