விஜய் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்ததால் ஆத்திரம்: டி.எஸ்.பி.யின் கையை கடித்து வைத்த த.வெ.க. தொண்டர்

மெல்வின் தனது அடையாள அட்டையை காட்டி தன்னை உள்ளே அனுப்புமாறு டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதம் செய்தார்.
விஜய் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுத்ததால் ஆத்திரம்: டி.எஸ்.பி.யின் கையை கடித்து வைத்த த.வெ.க. தொண்டர்
Published on

கரூர்,

கரூர் சின்னாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் மெல்வின். த. வெ.க. தொண்டரான இவர் நேற்று கரூர் வெண்ணைமலை அட்லஸ் அரங்கில் நடைபெற்ற முதல்-அமைச்சர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மிகுந்த உற்சாகத்தோடு தனது சைக்கிளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் மற்றும் த.வெ.க. கொடியை கட்டிக்கொண்டு வந்தார்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவரிடம் அடையாள அனுமதி அட்டை இல்லாததால் போலீசார் அவரை உள்ளே விட மறுத்தனர். அவர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தான் இருக்கும் அடையாள அட்டையை போலீசாரிடம் காட்டி தன்னை உள்ளே விடுமாறு 'கேட்டுள்ளார். ஆனால் அது செல்லாது என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மெல்வின், அருகில் இருந்த பேனரை கிழித்து எறிந்தார். இந்த காட்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை நோக்கி கல் மற்றும் பாட்டில்களை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த தஞ்சாவூர் டி.எஸ். பி. கார்த்திகேயன், அங்கு சென்று அவரை சமாதா னப்படுத்தினார். அப்போதும் மெல்வின் தனது அடையாள அட்டையை காட்டி தன்னை உள்ளே அனுப்புமாறு டி.எஸ்.பி.யிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு டி.எஸ்.பி. மறுப்பு தெரிவித்ததால், அடுத்த நொடியே, ஆவேசமடைந்த மெல்வின், டி.எஸ்.பி.கார்த்திகேயனின் கையை பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தார். வலி தாங்க முடியாமல் டி.எஸ்.பி. துடித்ததை பார்த்து மிரண்டு போன மற்ற போலீசார், உடனடியாக ஓடிவந்து ஓடிவந்து மெல்வினை பிடித்து இழுத்து டி.எஸ்.பி.யை மீட்டனர். இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி., மெல்வினின் கன்னத்தில் 2 அறை விட்டு அவரை மற்ற போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அவரையும் சைக்கிளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

முதல்-அமைச்சர் விஜய் தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டதும் போலீசார் மெல்வினை எச்சரித்து விடுவித்தனர். மெல்வின், மாலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது சைக்கிளில் சென்றார். 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி விட்டு புறப்பட்ட விஜய்யை பார்த்து மகிழ்ச்சியடைந்த மெல்வின், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் தனது சைக்கிளோடு மிகவும் சாந்தமாக சுற்றி திரிந்தார்

X

Daily Thanthi
www.dailythanthi.com