நெல்லை அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 2 பேர் பலி

பைக்கை ஓட்டி வந்த மகேஷ் மற்றும் சந்துரு ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர்.
விபத்து

சென்னை,

திருநெல்வேலி அருகே பத்தமடை சாலையில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்து

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (வயது 25). இவர் அவரது நண்பனான லெட்சுமணன் (வயது 20) என்பவரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தனது பைக்கில் பின்னால் அமர வைத்து ஓட்டிச் சென்றார். அவர்கள் சேரன்மகாதேவி அருகே பத்தமடை சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு முன்பு சென்று கொண்டிருந்தனர்.

அதேபோல எதிர்திசையில் கோபால சமுத்திரத்தைச் சேர்ந்த மகேஷ் (வயது 27) அவரது நண்பரான அந்தோணிராஜ் (வயது 20) என்பவரை தனது பைக்கில் பின்னால் அமர வைத்து வந்துள்ளார். அதிவேகமாக வந்த இருவரின் மோட்டார் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

உயிரிழப்பு

இதையடுத்து 4 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக்கை ஓட்டி வந்த மகேஷ் மற்றும் சந்துரு ஆகியோருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இரண்டு பேர் படுகாயமடைதனர். இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மீட்பு

படுகாயமடைந்த 2 பேரை போலீசார் மீட்டு அருகிலுள்ள சேரன்மகாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com