சேலம்: மின்னல் தாக்கியதில் மின்வாரிய ஊழியர்கள் இருவர் பலி..!

சேலம் அருகே மின்னல் தாக்கியதில் மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனிவேல் - விஜி
பழனிவேல் - விஜி
Published on

சேலம்:

சேலம் மாவட்டம், வாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜி (31) இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. அதுபோல் பைத்தூர் அருகே தவளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தா.பேட்டை தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தா.பேட்டை அருகே வாளசிராமணி கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்து கிணற்றுக்கு இலவச மின் இணைப்பு கொடுப்பதற்காக பழனிவேல், விஜி உள்பட 6 பேர் சென்றுள்ளனர். அப்போது பணி முடித்துவிட்டு பழனிவேல், விஜி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளிலும், மற்ற 4 பேர் தனியாகவும் தா.பேட்டை செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் இடி, மின்னலுடன் லேசாக மழை பெய்துகொண்டிருந்த நிலையில் உயர்மின் அழுத்த கம்பத்தை கடந்து சென்ற பழனிவேல், விஜி ஆகிய இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக திடீரென மின்னல் தாக்கி உள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து கீழே சுருண்டு விழுந்துள்ளனர்.

இதை கண்டு உடன் சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கியதில் மின்வாரிய ஊழியர்கள் இறந்து போன சம்பவம் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com