

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (27 வயது). இவர் கலப்பு திருமணம் செய்த நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில், தாமரைக்கண்ணனின் விண்ணப்பத்தை பரிசீலித்து உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறையில் பணியாற்றி வரும் ஊரக நல அலுவலர் சகுந்தலா (56 வயது), விரிவாக்க அலுவலர் பூங்கொடி (58 வயது) ஆகிய இருவரும் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தாமரைக்கண்ணன், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய 1,500 ரூபாயை தாமரைக்கண்ணனிடம் கொடுத்து, அதனை சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தாமரைக்கண்ணன் நேற்று காலையில் அந்த பணநோட்டுகளை வட்டார வளர்ச்சி அலுவலத்தில் வைத்து பூங்கொடி மற்றும் சகுந்தலா ஆகியோரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக 2 பெண் அலுவலர்களையும் கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.