

மும்பை,
கொரோனா தொற்று காரணமாக உலகமே கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. மராட்டிய அரசும் அதிக கடன் சுமையையும், வரி வருவாய் இழப்பையும் சந்தித்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
இதில் மராட்டியத்தை பொறுத்தவரை நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என மாநில அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று (8-ந் தேதி) காலை 2021-22-ம் ஆண்டுக்கான மராட்டிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித்பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்கள், சலுகைகள் எதுவும் இடம்பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பட்ஜெட்டில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக நிதிஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதேபோல முதலீடுகளை திரட்டுவது, சமூக திட்டங்களை முன்னெடுப்பது, உள்கட்டமைப்பு, தொழில் வளாச்சியில் பட்ஜெட்டில் அதிக முன்னுரிமைகள் கொடுக்கப்படலாம்.
அதே நேரத்தில் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மாநில அரசு அதற்கான வாட், செஸ் வரியை குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.