திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதான திட்டம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில், சனிக்கிழமை நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவருந்தினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (17.5.2025) திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் சனிக்கிழமை நாட்களில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் திருக்கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நிறைவான உணவு வழங்க அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, திருக்கோவில்களில் ஒருவேளை அன்னதானம், நாள் முழுவதும் அன்னதானம், திருவிழா மற்றும் சிறப்பு நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டிற்கு முன் ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆகிய 2 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 754 திருக்கோவில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் கூடுதலாக 11 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 13 திருக்கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது 764 திருக்கோவில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3.5 கோடி பக்தர்கள் பயனடைந்து வருகிறார்கள்.
2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் சனிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் இன்று (17.05.2025) சனிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனடிப்படையில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும், அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருத்தேரோட்டம், அருள்மிகு நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டம், மாசிமகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 82 நாட்களில் வடை, பாயசத்துடன் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆண்டொன்றுக்கு திருக்கோவிலுக்கு வருகை தரும் 82,000 பக்தர்கள் பயன்பெறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் மதன்மோகன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன்,இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர்,இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி,மாமன்ற ஆளும்கட்சி துணைத்தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






