

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.2.2026) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
தேர்வு நிலை நகராட்சியான பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 73,135 ஆகும். தற்போதைய பழைய பேருந்து நிலையம் 27 பேருந்து நிறுத்தங்களுடன் கூடிய "B" Class பேருந்து நிலையமாக பட்டுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்தது. அதிகமான பேருந்துகள் நகர் பகுதியில் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதை போக்கிடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பட்டுக்கோட்டை நகராட்சி நரியம்பாளையம் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.50 ஏக்கர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட A வகுப்பு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்துகளை நிறுத்தும் வசதி, 120 கடைகள், 2 உணவகங்கள், குடிநீர் வசதி, 2 இடங்களில் இரண்டு சக்கர வாகன நிறுத்தும் வசதி, ஒரு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, முன்பதிவு அறை, 3 பயணிகள் காத்திருப்பு அறைகள் மற்றும் 4 இடங்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.