உதயநிதி கைது, கடைகள் அடைப்பு; அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

உதயநிதி கைது நடவடிக்கை ஜனநாயக விரோதம். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என தி.மு.க. தெரிவித்து உள்ளது.
உதயநிதி கைது, கடைகள் அடைப்பு; அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
Published on

சென்னை

உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்ச்சியாக, அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.

தஞ்சையில் நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது, முதல்-அமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு த.வெ.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் த.வெ.க. மகளிர் அணி சார்பில், தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.

9 பிரிவுகளில் வழக்கு

த.வெ.க. அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் தஞ்சை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் இருந்து இன்று போலீஸ் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கலவரம் பரவி விடாமல் இருப்பதற்காக, அதிரடிப்படையினர் இறக்கி விடப்பட்டு உள்ளனர்.

மு.க. ஸ்டாலின் வருகை

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனும் வந்துள்ளார்.

பொய் வழக்கு

உதயநிதி கைது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்தியில், உதயநிதி கைது நடவடிக்கை ஜனநாயக விரோதம். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. கைது நடவடிக்கையால், உதயநிதியையோ, தி.மு.க.வையோ முடக்க முடியாது என தெரிவித்து உள்ளது.

நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று கைது நடவடிக்கை ஏன்? என கேட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் உதயநிதி எழுப்ப உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்ற அச்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com