

திருப்பூர்,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுகவின் வெற்றி வேட்பாளர் கே. பி. பரமசிவமை ஆதரித்து இன்றைய தினம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றினேன்.
கடந்த 5 ஆண்டுகால திமுகவின் மோசமான ஆட்சியில், கொலைக்களமாக பல்லடம் மாறியுள்ளது. விவசாயியின் குடும்பத்தையே வெட்டி படுகொலை செய்த அதிர்ச்சிகளை நாம் பார்த்தோம். ஆணவப் படுகொலை, சாதிய வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பிரச்சனை. 8,008 கொலைகள், 2080 பாலியல் வன்கொடுமைகள், 39,999 போக்சோ வழக்குகள் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது போதும்.
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடங்களின் எண்ணிக்கையே 323 தான். ஆனால், திமுகவின் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 403 தனியார் மதுபானக் கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கண்முன்னே நமது அடுத்த தலைமுறை சீரழிவதை பொறுத்துக்கொள்ள முடியுமா? மக்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, பின்னர் மக்களை ஏமாற்ற மத்திய அரசு மீது பொய் பழி சுமத்தும் இந்த ஊழல் திமுக ஆட்சி ஆண்டது போதும். மத்திய அரசோடு இணைந்து பணியாற்றும் மக்களுக்கான மக்களின் ஆட்சி அமைந்தாக வேண்டும்.
எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல்லடம் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் கே.பி.பரமசிவமிற்கு பேராதரவு வழங்கி, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க பல்லடம் மக்கள் தயாராகி விட்டார்கள். இந்த முறை திமுகவின் படுதோல்வி உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்று வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.